 |
|
 |
கவிதைகள்
கனவின் மீதி - அசுரன்
நகரில் நானொரு
கனவு நாயகன்
கிரனைட் கற்களைச் செதுக்கி
கட்டப்பட்டது எந்தன்
பண்ணை வீடு
குளிரெடுக்கும் வீட்டினுள்
அமர்வதற்கோ நீர் இருக்கை

முற்றம் எங்கும்
இறக்குமதிப் புல்வெளி
ஆங்காங்கே கூண்டுகளில்
கிளிகள், குருவிகள்,
புறாக்கள், காதல்பறவைகள்...

இருளை வெட்டிப் போட்டதால்
விரிந்தகன்ற சாலைகளில்
பறப்பது எந்தன்
இறக்குமதிக் கார்.
நடைப்பயிற்சிக்குக் கூட
இயந்திரம்தான்.

இதுதான் வாழ்வென
வாழ்ந்தவன், திரும்பினேன்
மீதிக் கனவுகளை
விட்டுச் சென்றிருந்த
என் சிற்றூருக்கு

சின்ன வயதில்
மாடுகள் மேய்த்த
பசும் புல்வெளியெங்கும்
வீடுகள்...வீடுகள்...
மீன்கள் துள்ளி விளையாடிய
நீரோடைகள் எங்கிலும்
மணல்...மணல்...

புன்னை இலைகளடுக்கி
குவியாடியால் தீ மூட்டி
கெண்டை மீன் சுட்டு
புசித்த நிழற்பரப்பில்
வெயில்...வெயில்...

ஆடுகளை மேய விட்டுவிட்டு
கூடிக்களித்த மலைக்குகைகள்
சிதறிக் கிடக்கின்றன
சல்லி...சல்லியாக...

என் கனவின் மீதியைத்
தின்றழித்த
பாதிக்கனவு கேட்கிறது
"இனி
எந்த உச்சியில் ஏறி
கடலைப் பார்ப்பது?"

|
 |